அஞ்சான் படம் திரைக்கு வருமுன்னே ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஆகஸ்ட் 8 ல் வெளியிடப்பட்ட அஞ்சான் பட முன்னோட்டம் பத்து லட்சம் ரசிகர்களுக்குமேல் பார்வையிடப்பட்டடுள்ளது. அஞ்சான் படம் அதன் தெலுகு மொழி மறுபதிப்பையும் சேர்த்து உலகம் முழுவதும் 1300 திரை அரங்குகளில் ஆகஸ்ட் 15 ல் வெளிவர இருக்கிறது. சென்னையில் மட்டும் 37 திரை அரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இந்த படத்தை பிரிட்டனில் வெளியிட உரிமை பெற்றுள்ள அயங்கரன் பன்னாட்டு நிறுவனம், பிரிட்டனில், புதிய சாதனையாக 58 திரை அரங்குகளில் திரையிட முயற்சி செய்வதாக தெரிகிறது.
“வேலை இல்லா பட்டதாரி” படத்தின் தனுஷ் புகை பிடிக்கும் போஸ்டர் விவகாரம் இன்னமும் முடிவடையாமல் இருக்கும் நிலையில் அந்த படத்தில் வரும் ஒரு வசனம் மேலும் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில், தனுஷ் தனது தந்தையிடம் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் தன்னை படிக்க வைத்ததால்தான் வேலை கிடைக்கவில்லை என்றும், தம்பியை செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் படிக்க வைத்ததால் வேலை கிடைத்துள்ளது என்றும் பேசுவது போல் வசனம் உள்ளது. இதற்க்கு ராமகிருஷ்ணா பள்ளி நிர்வாக்தினரும், மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள தனுஷ் வீட்டில் தமிழ்நாடு இந்து மகா சார்பில் முற்றுகை போராட்டமும் நடைபெற்றது. இதற்கிடையே தனுஷ் கைது செய்யபட்டுவிட்டார் என்ற வதந்தியும் வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில், இது குறித்து வேலையில்லா பட்டதாரி இயக்குனர் வேல்ராஜ் கூறும் போது, யாரையும் புண்படுத்த வேண்டும் என்று உள்நோக்கத்தில் அந்த வசனத்தை படத்தில் வைக்கவில்லை. இவ்வளவு பெரிய பிரச்சினை ஏற்படும் என்றும் சிந்திக்கவில்லை. மக்கள் உணர்வுகளை மதிக்கிறோம். சர்ச்சைக்குரிய வசனம் இனி படத்தில் இருக்காது என்று கூறியுள்ளார். எப்படியோ இந்த சர்ச்சைகள் எல்லாம் முடிவடைகிறதோ இல்லையோ படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைக்கிறது என்பதுதான் உண்மை.
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சவின் ஆதரவு பெற்ற நிறுவனம் என்று படம் தொடங்கிய நேரத்தில் செய்திகள் வெளியாயின. இதை கத்தி படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முதலில் இருந்தே மறுத்து வந்தார். இதன் பிறகு அடங்கியிருந்த இந்த பிரச்சினை இப்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. “தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு” என்ற பெயரில் சிலர் விஜய்க்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றனர். தீபாவளிக்கு ரிலீஸ் என்று படம் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நேரத்தில், இப்பிரச்சினையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முடிவு செய்து தமிழர் அமைப்புகளைச் சந்தித்துப் வருகிறார். இதுவரை பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன், சீமான் ஆகியோரைச் சந்தித்து உரிய விளக்கங்களை அளித்துள்ளதாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தமிழர் அமைப்புகளைச் சந்தித்து ஏ.ஆர்.முருகதாஸ் என்ன பேசினார்கள், தமிழர் அமைப்புகள் என்ன முடிவு எடுத்திருக்கின்றன போன்ற விவரங்கள் தெரியாத நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு, எங்களது முடிவை நாங்கள் இன்னும் கூறவில்லை என்றும் இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர்களின் பணத்தில் தயாரிக்கப்பட்ட படம் என்றால் இயக்குநரும் தயாரிப்பாளரும் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் ‘நாம் தமிழர்’ கட்சித் தலைவர் சீமான், ‘கத்தி’ படத்தில் ஈழ எதிர்ப்பாளர்களின் பங்களிப்பு இருக்குமேயானால் எனக்கு தகவல் வந்திருக்கும். ‘கத்தி’ படம் குறித்து இதுவரை யாரிடம் இருந்தும் இதுவரை எந்தவொரு தவறான தகவலும் வரவில்லை. அப்படியிருக்க அப்படத்தை எதிர்க்கும் அவசியம் எங்களுக்கு இல்லை. ஒருவேளை ‘கத்தி’ படத்தில் ஈழ எதிர்ப்பாளர்களின் பங்கு இருப்பதாக ஆதாரப்பூர்வமாக தெரியவந்தால் எதிர்ப்பை தெரிவிப்போம்’’ என்றார்.
தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் குறித்து இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் மிகவும் அநாகரிமாக விமர்சித்து வெள்ளிக்கிழமை ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இதற்க்கு கண்டனம் தெரிவித்து சென்னையிலுள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக் கோரி தமிழ் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இன்று நடத்திய போராட்டத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இன்று காலை பத்து மணிக்கு இலங்கை தூதரகத்தின் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரையுலகின் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். இலங்கை அரசுக்கு எதிரான கோஷங்களை முன்வைத்தனர். இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர், சீமான், இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், கலைப்புலி தாணு, டி சிவா, மனோபாலா, நடிகர்கள் சிவகுமார், ராஜேஷ் உள்பட பலரும் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளுக்கு ... கும்கி படத்தில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் நம்முடைய நட்சத்திர மதிப்பு விண்ணைத்தொடும் என்று லட்சுமிமேனனே நினைத்துப்பாத்திருக்க மாட்டார். சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு என அவர் நடித்த படங்கள் எல்லாம் வெற்றியடைந்தது ஒரு பக்கம், பத்தாம் வகுப்பு மாணவி என்ற இள வயது தோற்றம் இன்னொரு பக்கம் என்று அவரது காலடியில் பட வாய்ப்புகளை குவித்துவிட்டன. அனைத்து முன்னணி இளம் கதாநாயகர்களின் பார்வையும் தற்போது லட்சுமி மேனன் பக்கம் திரும்பிவிட்டன. புதுப்படங்கள் பற்றிய பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கும்போதே லட்சுமி மேனனை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யுங்கள் என்கிறார்களாம் முன்னணி இளம் கதாநாயகர்கள். இதற்கு கார்த்தியும் விதிவிலக்கில்லை. தற்போது குட்டிப்புலி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள படம் ‘ஜிகர்தண்டா’. இந்தப் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதோடு மலையாளத்தில் திலீப்புக்கு ஜோடியாக ஜோஷி இயக்கத்தில் லட்சுமி மேனன் நடித்துள்ள ‘அவதாரம்’ என்ற படமும் நேற்று வெளியாகியுள்ளது. ஒரே நாளில் இரண்டு பெரிய கதாநாயகர்களுடன் நடித்த படங்கள் வெளியாவதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் லட்சுமி மேனன். முன்னணி நாயகர்களின் சிபாரிசு விரல்கள் தன்னை நோக்கி நீள்வதைப் புரிந்து கொண்ட லட்சுமி மேனன் தன் சம்பளத்தை லட்சத்திலிருந்து கோடியாக்கிவிட்டார் என்று தெரியவருகிறது.
வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுஷ் புகைபிடிக்கும் காட்சி கொண்ட போஸ்டர்கள் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. தமிழ்நாடு புகையிலைத் தடுப்பு அமைப்பு இன்று டிஜிபி ராமானுஜத்தைச் சந்தித்து அப்படத்தின் விதிமீறல்களைச் சுட்டிக் காட்டினர். இந்தப் போஸ்டர்கள் எங்கு பார்த்தாலும் ஒட்டப்பட்டுள்ளன, மேலும் பள்ளிகள் அருகேயும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. எனவே படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் டிஜிபியிடம் வலியுறுத்தினர். புகாரைப் கேட்ட டிஜிபி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இந்த படத்தை பார்த்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் திருமணம் ஆகாத பசங்க அம்மா அப்பா முன்னாடி புகை பிடிப்பது, மது அருந்துவது என்பது நமது நாட்டை பொறுத்தவரை மரியாதை குறைவான செயலென்று கருதபடுகிறது. இதுவரை திரைப்படங்களில் புகைபிடித்த சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் யாரும் அம்மா அப்பா இருக்கும்போது புகை பிடிப்பது போல் காட்சிகளை அமைத்ததில்லை. ஆனால் இந்த படத்தில் தனுஷ், அவரது அம்மா அப்பா இருவரும் வீட்டில் இருக்கும்போதே புகை பிடித்து கொண்டிருக்கிறார். இந்த மாதிரி காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்கிறார் அந்த வங்கி அதிகாரி. தமிழ் நாட்டை பொறுத்தவரை ஹீரோகளுக்கென்று தனி மரியாதை உள்ளது. வில்லன்கள் செய்யும் காரியங்களை எல்லாம் ஹீரோ செய்ய ஆரம்பித்தால், அதை பார்க்கும் இளஞர்கள் தடம் மாற வாய்ப்புள்ளது. புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்கள் எளிதில் ஒட்டிக்கொள்ளும் ஆனால் அவைகளை கைவிடுவது என்பது சாதாரண காரியம் இல்லை என்கிறார் அவர். இந்த மாதிரி விஷங்களில் தணிக்கை துறைக்கு சரியான வழிகாட்டுதல் இருந்தாலும் அதை கடைபிடிக்காமலிருப்பது வருத்தம் அளிக்கிறது என்கிறார் அந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி.
கேரள அரசின் 2013 வருட திரைப்பட விருது தேர்வுக் குழுவின் தலைவராக பாரதிராஜா நியமிக்கப்பட்டிருந்தார். 2013 வருடத்தின் சிறந்த படமாக சுதேவனின் சிஆர் 89 படம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இரண்டாவது படமாக நார்த் 24 காதம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகராக பகத் பாசிலும், லாலும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த காமெடி நடிகருக்கான விருதுக்கு சுராஜ் வெஞ்சரமூடு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் "பேரறியாதவர்" என்ற படத்தை தயாரித்த அனில் குமார் என்பவர் தேர்வுக்குழுவினர் பரிசீலனைக்கு 85 படங்கள் வந்ததாகவும், இந்தப் படங்கள் எல்லாவற்றையும் 10 நாட்களுக்குள் பார்த்து விருதுகளை அறிவிக்கபட்டதாக தேர்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் 10 நாட்களில் 85 படங்களை எப்படி பார்க்க முடியும். அனைத்துப் படங்களையும் பார்க்காமலேயே விருதுகளை அறிவித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுடன் நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் பாரதிராஜா உள்ளிட்ட 7 தேர்வுக் குழுவினருக்கும் பத்து தினங்களுக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு மூலகாரணமே டைரக்டர் பாரதி ராஜா தலைமையிலான திரைப்பட விருது தேர்வுக் குழு நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவை சிறந்த நகைச்சுவை நடிகராக தேர்வு செய்ததுதான். கேரள அரசின் விருது அறிவிக்கப்படுவதற்கு சில தினங்கள் முன்புதான் பேரறியாதவர் படத்துக்காக சுராஜ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியிருந்தார். தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற சுராஜுக்கு சிறந்த காமெடி நடிகனுக்கான விருதை அளித்து சிறுமைப்படுத்திவிட்டது என வருத்தபடுகிறார் பேரறியாதவர் படத்தை இயக்கிய டாக்டர் பைஜு.
|