கேரள அரசின் 2013 வருட திரைப்பட விருது தேர்வுக் குழுவின் தலைவராக பாரதிராஜா நியமிக்கப்பட்டிருந்தார். 2013 வருடத்தின் சிறந்த படமாக சுதேவனின் சிஆர் 89 படம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இரண்டாவது படமாக நார்த் 24 காதம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகராக பகத் பாசிலும், லாலும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த காமெடி நடிகருக்கான விருதுக்கு சுராஜ் வெஞ்சரமூடு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் "பேரறியாதவர்" என்ற படத்தை தயாரித்த அனில் குமார் என்பவர் தேர்வுக்குழுவினர் பரிசீலனைக்கு 85 படங்கள் வந்ததாகவும், இந்தப் படங்கள் எல்லாவற்றையும் 10 நாட்களுக்குள் பார்த்து விருதுகளை அறிவிக்கபட்டதாக தேர்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் 10 நாட்களில் 85 படங்களை எப்படி பார்க்க முடியும். அனைத்துப் படங்களையும் பார்க்காமலேயே விருதுகளை அறிவித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுடன் நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் பாரதிராஜா உள்ளிட்ட 7 தேர்வுக் குழுவினருக்கும் பத்து தினங்களுக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு மூலகாரணமே டைரக்டர் பாரதி ராஜா தலைமையிலான திரைப்பட விருது தேர்வுக் குழு நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவை சிறந்த நகைச்சுவை நடிகராக தேர்வு செய்ததுதான். கேரள அரசின் விருது அறிவிக்கப்படுவதற்கு சில தினங்கள் முன்புதான் பேரறியாதவர் படத்துக்காக சுராஜ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியிருந்தார். தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற சுராஜுக்கு சிறந்த காமெடி நடிகனுக்கான விருதை அளித்து சிறுமைப்படுத்திவிட்டது என வருத்தபடுகிறார் பேரறியாதவர் படத்தை இயக்கிய டாக்டர் பைஜு.