கடந்த 2009 ல் ஈழப்போரின் கடேசிகட்டதில் பிரபாகரனின் 12 வயது பாலகன் பாலச்சந்திரன், கைதியாக பிடிக்கப்பட்டு பின்னர் சுட்டு கொல்லப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். இந்த படுபாதக செயலைகண்டு அன்று உலகமே அதிர்ச்சியில் மூழ்கியது. மேலும் இந்த ஈனத்தனமான செயலுக்கு உலக நாடுகள் தங்கள் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வந்தன. ஆனால் இந்தியாவில் இந்த செயல் குறித்து பெரிதாக எந்த எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக இங்குள்ள தயாரிப்பாளர்கள் ஈழப்போராளிகளை கொச்சைபடுத்திதான் திரைப்படம் எடுத்து வந்தனர். இப்படியொரு சூழலில் முதன் முதலாக தைரியமாக இயக்குனர் பிரவீன் காந்தி, புலிப்பார்வை என்ற படத்தை, பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் படுகொலையை மையப்படுத்தி எடுத்திருக்கிறார். இதனை வேந்தர் மூவீஸ் மதன் தயாரித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் பிரவீன் காந்தி கூறும்போது கைதுசெய்யப்பட்ட பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யபடுவதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படம் தம்மை வெகுவாக பாதித்தது என்றார். சில நிமிடங்களில் கொல்லப்பட்டு விடுவோம் என்று தெரிந்தும் அதை பற்றி சிறிதளவும் கவலையோ பயமோ இல்லாமல் அலட்சியமாக கொலைகாரர்களை பார்க்கும் பார்வை அசாதாரணமானது என்றார். இந்த பார்வைதான் என்னை பாலச்சந்திரனை பற்றி திரைப்படம் எடுக்க தூண்டியது என்றும் இயக்குனர் பிரவீன் காந்தி தெரிவித்தார். ஈழ தமிழர்களை பற்றிய திரைப்படங்கள் என்றாலே கண்களில் விளக்கெண்ணையை போட்டு பார்க்கும் தணிக்கை துறையும் புலிப்பார்வை படத்திற்கு U/A சான்றிதழ் கொடுத்துள்ள நிலையில் படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இயக்குனர் பிரவீன் காந்திக்கும் தயாரிப்பாளர் வேந்தர் மூவீஸ் மதனுக்கும் முதலிலேயே நமது வாழ்த்துகளை தெரிவித்துவிடுவோம். |
0 Comments
|