லைக்கா நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சவின் ஆதரவு பெற்ற நிறுவனம் என்று படம் தொடங்கிய நேரத்தில் செய்திகள் வெளியாயின. இதை கத்தி படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முதலில் இருந்தே மறுத்து வந்தார். இதன் பிறகு அடங்கியிருந்த இந்த பிரச்சினை இப்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. “தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு” என்ற பெயரில் சிலர் விஜய்க்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றனர். தீபாவளிக்கு ரிலீஸ் என்று படம் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நேரத்தில், இப்பிரச்சினையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முடிவு செய்து தமிழர் அமைப்புகளைச் சந்தித்துப் வருகிறார். இதுவரை பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன், சீமான் ஆகியோரைச் சந்தித்து உரிய விளக்கங்களை அளித்துள்ளதாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தமிழர் அமைப்புகளைச் சந்தித்து ஏ.ஆர்.முருகதாஸ் என்ன பேசினார்கள், தமிழர் அமைப்புகள் என்ன முடிவு எடுத்திருக்கின்றன போன்ற விவரங்கள் தெரியாத நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு, எங்களது முடிவை நாங்கள் இன்னும் கூறவில்லை என்றும் இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர்களின் பணத்தில் தயாரிக்கப்பட்ட படம் என்றால் இயக்குநரும் தயாரிப்பாளரும் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் ‘நாம் தமிழர்’ கட்சித் தலைவர் சீமான், ‘கத்தி’ படத்தில் ஈழ எதிர்ப்பாளர்களின் பங்களிப்பு இருக்குமேயானால் எனக்கு தகவல் வந்திருக்கும். ‘கத்தி’ படம் குறித்து இதுவரை யாரிடம் இருந்தும் இதுவரை எந்தவொரு தவறான தகவலும் வரவில்லை. அப்படியிருக்க அப்படத்தை எதிர்க்கும் அவசியம் எங்களுக்கு இல்லை. ஒருவேளை ‘கத்தி’ படத்தில் ஈழ எதிர்ப்பாளர்களின் பங்கு இருப்பதாக ஆதாரப்பூர்வமாக தெரியவந்தால் எதிர்ப்பை தெரிவிப்போம்’’ என்றார்.