வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுஷ் புகைபிடிக்கும் காட்சி கொண்ட போஸ்டர்கள் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. தமிழ்நாடு புகையிலைத் தடுப்பு அமைப்பு இன்று டிஜிபி ராமானுஜத்தைச் சந்தித்து அப்படத்தின் விதிமீறல்களைச் சுட்டிக் காட்டினர். இந்தப் போஸ்டர்கள் எங்கு பார்த்தாலும் ஒட்டப்பட்டுள்ளன, மேலும் பள்ளிகள் அருகேயும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. எனவே படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் டிஜிபியிடம் வலியுறுத்தினர். புகாரைப் கேட்ட டிஜிபி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இந்த படத்தை பார்த்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் திருமணம் ஆகாத பசங்க அம்மா அப்பா முன்னாடி புகை பிடிப்பது, மது அருந்துவது என்பது நமது நாட்டை பொறுத்தவரை மரியாதை குறைவான செயலென்று கருதபடுகிறது. இதுவரை திரைப்படங்களில் புகைபிடித்த சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் யாரும் அம்மா அப்பா இருக்கும்போது புகை பிடிப்பது போல் காட்சிகளை அமைத்ததில்லை. ஆனால் இந்த படத்தில் தனுஷ், அவரது அம்மா அப்பா இருவரும் வீட்டில் இருக்கும்போதே புகை பிடித்து கொண்டிருக்கிறார். இந்த மாதிரி காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்கிறார் அந்த வங்கி அதிகாரி. தமிழ் நாட்டை பொறுத்தவரை ஹீரோகளுக்கென்று தனி மரியாதை உள்ளது. வில்லன்கள் செய்யும் காரியங்களை எல்லாம் ஹீரோ செய்ய ஆரம்பித்தால், அதை பார்க்கும் இளஞர்கள் தடம் மாற வாய்ப்புள்ளது. புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்கள் எளிதில் ஒட்டிக்கொள்ளும் ஆனால் அவைகளை கைவிடுவது என்பது சாதாரண காரியம் இல்லை என்கிறார் அவர். இந்த மாதிரி விஷங்களில் தணிக்கை துறைக்கு சரியான வழிகாட்டுதல் இருந்தாலும் அதை கடைபிடிக்காமலிருப்பது வருத்தம் அளிக்கிறது என்கிறார் அந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி.