சூர்யா இரட்டை வேடங்களில் நடித்த ‘அஞ்சான்.’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. விழா மேடையில், சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவருக்கு பட அதிபர்கள் சுபாஷ் சந்திரபோஸ், யு.டி.வி.தனஞ்செயன் ஆகிய இருவரும் ஆளுயர மாலை அணிவித்தார்கள். விழாவில், சூர்யா ரசிகர்களிடம் “திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்காதீர்கள். உங்கள் கால்களை தொட்டு கேட்கிறேன். ‘சிங்கம்-2’ படத்துக்கு மட்டும் 45 லட்சத்துக்கு மேல் திருட்டு வி.சி.டி. அடித்து இருக்கிறார்கள்.’’ என்று மிக உருக்கமாக ஒரு வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் தனது பிறந்த நாளுக்காக சுவரொட்டிகள் அடித்து பணத்தை விரயம் செய்யாதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டார். ‘அஞ்சான்’ படத்தில் கிருஷ்ணா, ராஜுபாய் என 2 கதாபாத்திரங்களில் நடிப்பது தமக்கு பெரிய சவாலாக இருந்தது என்றும் சூர்யா தெரிவித்தார். |
விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், செயலாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, பட அதிபர்கள் கே.முரளிதரன், அன்பு செழியன், மதன், கே.எஸ்.சிவராமன், டைரக்டர்கள் பார்த்திபன், விஜய், சசி, விக்ரம்குமார், கோகுல், பொன்ராம், வசனகர்த்தா பிருந்தாசாரதி, இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா, பாடல் ஆசிரியர்கள் நா.முத்துக்குமார், கபிலன், விவேகா, நடிகர்கள் மனோபாலா, சூரி ஆகியோரும் பேசினார்கள்.