காதல் படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் பிரபலமான தண்டபாணி 20-7-2014 அன்று காலை சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். 'காதல்' படத்தில் சந்தியாவின் அப்பாவாக வில்லன் நடிப்பால் பிரபலமானதால் 'காதல்' தண்டபாணி என்று அழைக்கப்பட்டார். இந்த படத்தைத் தொடர்ந்து வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 160 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடித்திருந்தார். தற்போது சரத்குமார் ஹீரோவாக நடித்து வரும் சண்டமாருதம் படத்தில் நடித்து வந்தார். நேற்று கூட (19-7-2014) அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்திருக்கிறார். அவரது மரணத்திற்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார், நடிகர்கள் சமுத்திரகனி, டெல்லி கணேஷ், இயக்குனர் வெங்கடேஷ், நடிகர் சங்க மேலாளர் நடேசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர் அனுதாபங்களைத் தெரிவித்து வருகிறார்கள். தண்டபாணியின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான திண்டுக்கல்லில் நாளை நடைபெறுகிறது. 71 வயதான தண்டபாணிக்கு 3 மகன்கள் மற்றும் 1 மகள் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. |